Wednesday, May 18, 2022

இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

 திருச்சிற்றம்பலம்

அ௫ளியவர் : சுந்தரர்

திருமுறை : ஏழாம் திருமுறை

பண் : நட்டராகம்

நாடு : சோழநாடு காவிரி வடகரை

தலம் : குருகாவூர் வெள்ளடை


இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்

முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.1


ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்

காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்

மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.2


பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்

ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே

காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்

வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.3


வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை

அப்படி அழகாய அணிநடை மடஅன்னம்

மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.4


வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே

அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்

விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.5


பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்

கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்

மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே

விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.6


போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை

நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்

சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட

வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.7


மலக்கில்நின் அடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்

சலச்சல மிடுக்குடைய தருமனார் தமர்என்னைக்

கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே

விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.8


படுவிப்பாய் உனக்கேஆள் பலரையும் பணியாமே

தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே

கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே

விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.9


வளங்கனி பொழில்மல்கு வயல் அணிந் தழகாய

விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை

இளங்கிளை ஆரூரன் வனப்பகையவள் அப்பன்

உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 7.29.10


– திருச்சிற்றம்பலம் –

No comments:

Post a Comment

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...