Monday, February 15, 2021

புருஷ ஸூக்தம் தமிழில் ஜடாயு

 (ரிக். பத்தாவது மண்டலம், 90வது சூக்தம்)


ஆயிரம் சிரங்கள் கொண்டோன் புருஷன்

ஆயிரம் விழிகள் ஆயிரம் பாதங்கள்

புவியெங்கும் பரந்து

நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்.  (1)


இவை அனைத்தும் புருஷனே

முன்பிருந்தவை இனி வருபவை எல்லாம்

அழிவற்ற பெருநிலையின் தலைவன் அவன்

பருவுலகு கடந்தோன். (2)


ஈதனைத்தும் அவனது மகிமையே

இதனினும் பெரியோன் புருஷன்

தோன்றியதனைத்தும் அவனது கால் பாகம்

அழிவற்றது முக்கால் பாகம்

அதுவே ஒளியுலகு. (3)


மேற்சென்றனன் முக்கால் பாகத்துப் புருஷன்

அவனது கால்பாகம் தோன்றியது மீண்டும் இங்கு

திசையெங்கிலும் உட்புகுந்து பரந்தனன்

அசையும் அசையாப் பொருளனைத்திலும். (4)


அவனிடத்தினின்று விராட் பிறந்தது

விராட்டிலிருந்து (பல்லுயிர்களாக) பிறந்தான் புருஷன்

பிறந்தவன் முன்னும் பின்னுமாய்

புவியெங்கும் நிறைந்தான். (5)


புருஷனே ஆகுதியாக

வேள்வி செய்தனர் தேவர்கள்

வசந்தம் நெய்யாக

கோடை விறகாக

சரத்காலம் அவியுணவாக

ஒரு வேள்வி. (6)


ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன்

அவன் மீது நீர் தெளித்தனர்

நேர்வழியினர் ரிஷிகள் கூடி

வேட்டனர் தேவர்கள். (7)


அனைத்தும் எரிந்த அவ்வேள்வி

அதனின்று திரண்டது நெய்கலந்த ஊண்.

உருவாகின

காற்றால் ஆன உயிர்கள்

வனமிருகங்கள்

கிராமத்து விலங்குகள். (8)


அனைத்தும் எரிந்த அவ்வேள்வி

அதனின்று பிறந்தன ரிக்குகள் சாமகீதங்கள்

பிறந்தன சந்தங்கள்

பிறந்தன யஜுர் மந்திரங்கள். (9)


அதனின்று பிறந்தன பரிகள்

இருவரிசைப் பல் மிருகங்கள்

அதனின்று பிறந்தன பசுக்கள்

வெள்ளாடுகள் செம்மறிகள். (10)


புருஷனை வகிர்ந்த போது

கற்பித்தது எவ்வடிவில்?

முகம் எது கை எது?

தொடை எது கால் எது? (11)


பிராமணன் முகமானான்

கைகள் அரசன்

தொடைகள் வைசியன்

பாதங்களில் சூத்திரன் தோன்றினான். (12)


மனத்தினின்று சந்திரன் பிறந்தான்

விழிகளில் கதிரோன்

முகத்தில் இந்திரன் அக்னி

மூச்சில் பிறந்தது காற்று. (13)


கொப்பூழில் உதித்தது விண்வெளி

சிரத்தினின்று விரிந்தது ஆகாயம்

பாதங்களினின்று பூமி

செவிகளினின்று திசைகள்

அவ்வாறே உருவெடுத்தன

உலகங்கள் அனைத்தும். (14)


ஏழு பரிதி எனும் வேள்விக் கோல் நாட்டி

மூவேழு சமித்துக்கள் கொண்டு

வேள்வி சமைக்கும் தேவர்கள்

புருஷனை யாகப் பசுவாய்க் கட்டினர். (15)


வேள்வியால் வேள்வியை வேட்டனர் தேவர்கள்

அவையே முதல் தர்மங்கள் ஆயின.

முன்னோர் நேர்வழியினர் தேவர்கள் வாழ்

மேன்மை உலகடைவர்

அந்த (தர்மவழிச் செல்லும்) பெரியோர். (16)

No comments:

Post a Comment

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...